Saturday, June 12, 2010

குருதி கொட்டும் செம்மொழி - இன்குலாப்



நினைவுப் படலத்தில்
குருதிக் கோடுகளாய்ப் பதிந்த
கொடிய நாட்கள் அவை.

வானம் மறுக்கப்பட்ட பறவைகளை
நான்கு திசையிலிருந்து
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்.

கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக் கொடிகள் படர்ந்த நாட்கள்.

பறவைகளின் நெஞ்சுப் படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்.

வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிட முடியாதென்று,
நாக்கை சப்புக் கொட்டிப்
பறவைகளின் பச்சைக்கறி விற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்

கிளிகளுக்கு இரங்குவதாய்
அழுத பூனை
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுவிரிக்கும் நேரமே
உண்ணாதிருந்த
மாபெரும் போராட்ட நாட்கள்

அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து,
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும் ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?

இந்த நினைவுகள்
விடை வேண்டும் கேள்விகள்.

தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப் பலகையிலிருந்தும்

விரைந்து விற்றுக் கொண்ட
கலாநிதிகளின்
ஆய்வாழங்களிலிருந்தும்

அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்
விலகி,

வெகுதொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்

- நன்றி ; மே 2010 / தாமரை

No comments:

Post a Comment